துபாய், சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த சென்னை பயணிகளிடம் ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆலந்தூர்:
துபாயில் இருந்து இன்று காலை ஒரு விமானம் சென்னை வந்தது. இதில் விமான நிலையம் வந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது, அப்துல்லா, ஆசாத் ஆகியோர் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தகுந்த ஆவணங்கள் இல்லாமல் நூர்ஜகான் என்ற பெண் கொண்டு வந்த தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது போல் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை வந்த ஸ்ரீராகவலு என்பவருடைய சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவர் சூட்கேஸ் கைப்பிடியில் தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று இரவும், இன்று காலையும் சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்கம் 710 கிராம். இதன் மதிப்பு 24 லட்சம் ரூபாய்.
நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் செல்வதற்காக பயணிகள் வந்தனர். அவர்களுடைய உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் சூட்கேசில் உள்ள ரகசிய அறையில் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் வைத்து இருந்தது தெரிய வந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.