செய்திகள்

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர வேண்டும் - ராமதாஸ்

Published On 2019-01-09 07:02 GMT   |   Update On 2019-01-09 07:02 GMT
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பட்டாசுகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், பச்சை உப்பு எனப்படும் பேரியம் நைட்ரேட் வேதிப்பொருளைக் கொண்டு பட்டாசு தயாரிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

அதற்கு மாற்றாக சுற்றுச் சூழலை பாதிக்காக மூலப் பொருட்களைக் கொண்டு பட்டாசுகளைத் தயாரிக்கலாம் என்று நீதிபதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பின்படி பட்டாசுகள் தயாரிப்பது சாத்தியமல்ல என்பதால், நவம்பர் 2-ந்தேதி முதல் கடந்த 69 நாட்களாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த 1400க்கும் கூடுதலான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சிவகாசி பகுதியில் தொழில்துறை முடங்கிக் கிடக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும், எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இன்னும் கேட்டால் இயற்கை நமக்கு அளித்த இவ்வுலகை பாதுகாத்து அப்படியே அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பட்டாசுகள் தான் தயாரிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது. அதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

ஆனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை எவ்வாறு தயாரிப்பது? என்ற வினாவுக்குத் தான் இன்று வரை விடை காணப்படவில்லை. பசுமைப் பட்டாசு என்ற தத்துவமே உலகில் இதுவரை உருவாக்கப்படவில்லை.

பழைய தொழில்நுட்பத்திலிருந்து புதிய தொழில் நுட்பத்திற்கு மாற வேண்டுமானால், புதிய தொழில் நுட்பம் பயன் பாட்டுக்கு ஏற்றது என சான்றளிக்கப்பட்டு, அதன் பின்னர் சிறிது கால அவகாசம் தேவைப்படும். பசுமைப்பட்டாசு உற்பத்திக்கும் இது பொருந்தும்.

ஆனால், பசுமைப்பட்டாசு என்றால் என்ன என்பதே இன்னும் வரையறுக்கப்படாத நிலையில் அவற்றை தயாரிப்பது எவ்வாறு சாத்தியமாகும்? அதனால், பசுமைப் பட்டாசுக்கான வரையறையும் அவற்றை தயாரிக்கும் முறையும் இறுதி செய்யப்பட்ட பின்னர், ஓராண்டு கால அவகாசத்துக்குப் பிறகு தான் அவற்றின் தயாரிப்பு தொடங்கப்பட வேண்டும். அதுவரை பழைய வரையறைப்படியே பட்டாசு ஆலைகள் செயல்படுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.

மற்றொருபுறம், பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 10 லட்சம் பணியாளர்கள் கடந்த இரு மாதங்களாக வேலை இழந்துந்துள்ளனர். அதனால், அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலையில், அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், மீன்பிடி இல்லாத காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல் பட்டாசு ஆலை ஊழியர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News