செய்திகள்

ஒரத்தநாடு அருகே கோவில் கதவை உடைத்து துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலை கொள்ளை

Published On 2018-12-26 05:17 GMT   |   Update On 2018-12-26 05:17 GMT
ஒரத்தநாடு அருகே கோவில் கதவை உடைத்து துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலை கொள்ளை போய் உள்ளதால், கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டில் இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று. கும்பாபிஷேக விழா நடந்தது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் கோவில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கோவிலில் இருந்த துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலையை திருடினர். மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையையும் எடுத்து கொண்டனர்.

பின்னர் கோவிலில் இருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

இன்று காலை கோவிலுக்கு வந்த கிராம மக்கள், கோவில் கதவு உடைக்கப்பட்டு, அம்மன் சிலை கொள்ளை போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளை போன அம்மன் சிலை 3 அடி உயரம் கொண்டதாகும். இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

கொள்ளை சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து சோதனை நடத்தினர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதே கோவில் விநாயகர்சிலை கொள்ளை போய் உள்ளது. இந்நிலையில் தற்போது துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலையும் கொள்ளை போய் உள்ளதால், கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News