செய்திகள்

7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - அற்புதம்மாள்

Published On 2018-12-24 10:37 GMT   |   Update On 2018-12-24 10:38 GMT
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.

திருவாரூர்:

திருவாரூரில் தமிழர் தன்மான பேரவை சார்பில் நேற்று இரவு கருத் தரங்கம் நடந்தது. இதில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனது மகன் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு உரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் சில அரசியல் காரணங்களால் விடுதலை செய்யாமல் இருந்து வருகின்றனர். இதில் அரசை குறை கூட முடியாது. 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு, கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கும் கொலை வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணை அதிகாரியும் சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்த பிறகு கவர்னர் ஏன் கையெழுத்திட மறுத்து வருகிறார் என்று தெரிய வில்லை. 7 பேரும் சட்டத்தை மதித்து கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News