செய்திகள்

சேலம் கோட்டை பெருமாள் கோவில் அருகே 6 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

Published On 2018-12-24 05:18 GMT   |   Update On 2018-12-24 05:18 GMT
சேலம் கோட்டை பெருமாள் கோவில் அருகே 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிளுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் இன்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்:

சேலம் கோட்டை பெருமாள் கோவில் பின் பகுதியில் சின்னசாமி தெரு உள்ளது.

இந்த தெருவில் வசிக்கும் கவுதீப்முகைன் என்பவர் நேற்றிரவு வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டிற்குள் புகை வாடை வருவதை அறிந்த அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்தார்.அப்போது அங்கிருந்து புகை வரவில்லை என்பதை உணர்ந்த அவர் கதவை திறந்து வெளியே வந்தார்.

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.

அப்போது 5 வீடுகளை தாண்டி ஒரு டிரான்ஸ்பார்மரின் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிளும் தீப்பிடித்து எரிவதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனே சத்தம்போட்டு அவர்களை எழுப்பினார்.

அதிகாலை 2.30 மணி என்பதால் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களான ரகுமத்துல்லா, சர்தீன், சுல்தான், முபாரக், சானாஷ் மற்றும் சைக்கிள் உரிமையாளரான ரி‌ஷன் (19) மற்றும் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த படி வெளியே ஓடி வந்தனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் அருகில் செல்ல முடியவில்லை. இதனால் அந்த மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர்கள் கதறினர். மேலும் மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததாக அவர்கள் புகார் கூறினர்.

தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு திரண்ட அந்த பகுதியினர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபர்களை உடனே பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் ஏதாவது கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது அதில் மர்ம நபர்கள் உருவம் பதிந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

சேலம் மாநகரின் முக்கிய பகுதியான கோட்டையில் ஒரே நேரத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிளுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் இன்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News