தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது
தூத்துக்குடி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு தென் கிழக்கே 930 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து ஓங்கோலுக்கும்- காக்கிநாடாவுக்கும் இடையே வருகிற 17-ந் தேதி பகல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.