செய்திகள்

கபடி, கைப்பந்து போட்டி உடலை திடமாக இருக்க உதவும்- கவர்னர் பன்வாரிலால் பேச்சு

Published On 2018-12-10 04:39 GMT   |   Update On 2018-12-10 04:39 GMT
கபடி, கைப்பந்து, எறிப்பந்து ஆகிய 3 போட்டிகள் உடலை திடமாக இருக்க உதவும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
ஈரோடு:

ஈஷா யோகா மையம் சார்பில் 14-வது ஈஷா கிரா மோத்சவம் விழா ஈரோடு அருகே கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலியில் நேற்று நடைபெற்றது.

விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

ஈஷா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமோத்சவம் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு என்பது தன்னம்பிக்கையுடனும், கவுரவத்தை பாதுகாக்க தைரியமாகவும் வலுவாகவும் இருக்க உதவுகிறது. பள்ளிக் கூடங்கள் திறமைகளை ஊக்குவிப்பதற்கான மையங்கள் ஆகும். எனவே பள்ளிக்கூடங்களில் பாடங்களுடன் சேர்ந்து விளையாட்டும் கற்று கொடுக்கப்படுகிறது.

சுவாமி விவேகானந்தர் கூறும் போது வலிமை என்பது வாழ்க்கை, பலவீனம் என்பது மரணம் என்று குறிப்பிட்டு உள்ளார். நீ உன் மீது நம்பிக்கை கொள்ளாத வரை நீ கடவுள் மீது நம்பிக்கை கொள்ளாதே என்றும் கூறியுள்ளார். விளையாட்டு ஆரோக்கியமான உடலையும், மன தைரியத்தையும் தருகிறது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.

விளையாட்டில் பங்கேற்றால் போட்டித்திறன், நேர மேலாண்மை, குழுப் பணி ஆகியவற்றின் திறமைகள் வளர்ச்சி பெற உதவுகிறது. உடலின் இயல்பான திறமைகளை மீறி போட்டியிடுவதற்கும், உற்சாகம் அடைவதற்கும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஈஷா கிராமோத்சவத்தில் கலந்து கொண்ட 40 ஆயிரம் வீரர், வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி உள்ளனர். அவர்களில் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி இறுதி போட்டியில் விளையாடினார்கள். இதுபோன்று வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு உயர்த்தும் வகையில் கிராமப்புற மக்களை உருவாக்கும் ஈஷா அறக்கட்டளையின் செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.

கபடி என்பது தமிழ்நாடு மாநில விளையாட்டு. இது ‘‘சடுகுடு’’ என்கிற தமிழ்மொழி வார்த்தையில் இருந்து வந்தது.

கடந்த 1964-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் கைப்பந்து சேர்க்கப்பட்டது. இது உலகம் முழுவதும் விளையாடிய பிரபலமான விளையாட்டு ஆகும். 1940-ம் ஆண்டிலேயே ஆசியாவிலேயே இந்தியாவில் முதல் முதலாக பெண்கள் எறிப்பந்து போட்டியை விளையாடியது பலரும் அறிந்து இருக்கலாம்.

கபடி, கைப்பந்து, எறிப்பந்து ஆகிய 3 போட்டிகளும் அனைவருக்கும் பொதுவானது. அதன் விதிமுறைகள் எளிதாக இருப்பதால் அனைவராலும் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டை விளையாடுபவர்களின் உடல் திடமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் 3 விளையாட்டுகளும் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதில் ஆச்சரியம் இல்லை.

இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
Tags:    

Similar News