செய்திகள்

விபத்துக்களை தடுக்க மின்சார ரெயிலில் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் - ஐகோர்ட்டு யோசனை

Published On 2018-12-02 09:32 GMT   |   Update On 2018-12-02 09:32 GMT
விபத்துக்களை தடுக்க மின்சார ரெயிலில் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது. #Train #Highcourt

சென்னை:

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த ஜூலை 27-ந்தேதி மின்சார ரெயிலில் படிக்கட்டில் இளைஞர்கள் தொங்கியபடி சென்ற போது தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர். இதில் 6 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து கே. சதீஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த பொது நல வழக்கில், மின்சார ரெயிலில் தானியங்கி கதவு அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் சத்ய நாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு நடந்தது.

அப்போது நீதிபதிகள் கூறும் போது, தானியங்கி கதவுகள் கொண்ட மின்சார ரெயில்களை உடனடியாக தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இது போன்ற தானியங்கி கதவு மின்சார ரெயில்களை 2019-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியங்களை தென்னக ரெயில்வே கண்டுபிடிக்க வேண்டும் என்றனர்.

அப்போது ரெயில்வே தரப்பில் கூறும் போது, வடக்கு மற்றும் மத்திய ரெயில்வே துறை சார்பில் மும்பையில் ஏ.சி. வசதியுடன் தானியங்கி கதவு கொண்ட மின்சார ரெயில்கள் பரி சார்த்த முறையில் இயக்கப்படுகிறது. இது தென்னக ரெயில்வேயிலும் படிப்படியாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் தானியங்கி கதவு அமைப்பதற்காக ரெயில்வே கவுன்சிலில் சாதகமான கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே உள்ள ரெயில்களில் தானியங்கி கதவுகள் அமைப்பது சாத்தியமில்லை. அதற்கு ரூ.3500 கோடி செலவாகும்.

நீண்ட காலம் ஆகும். மேலும் இது போன்ற ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்படும் என்பதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உருவாகும் என்று ரெயில்வே கவுன்சில் தெரிவித்துள்ளது. #Train #Highcourt

Tags:    

Similar News