செய்திகள்

ராணுவ முத்திரை பதித்த கையுறையுடன் டோனி விளையாட அனுமதிக்க வேண்டும் - இந்திய கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள்

Published On 2019-06-07 23:11 GMT   |   Update On 2019-06-07 23:11 GMT
ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கையுறையுடன் டோனி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஐ.சி.சி.க்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
லண்டன்:

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடுகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான டோனி ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கையுறையுடன் விளையாடியது டெலிவி‌‌ஷனில் ஒளிபரப்பானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது. இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வகிக்கும் டோனி துணை ராணுவ சிறப்பு படையினரின் பாலிதான் (தியாகத்தை குறிக்கும் அடையாளம்) என்ற முத்திரையை தனது கையுறையில் (குளோவ்ஸ்) பதித்து இருந்தார்.

இதுபோன்ற முத்திரையை பயன்படுத்துவது ஆட்ட விதிமுறைக்கு புறம்பானதாகும். எனவே ராணுவ முத்திரையை அடுத்த ஆட்டத்துக்குள் டோனி அகற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது.



இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் வாரியமும் டோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கருத்து தெரிவிக்கையில், ‘டோனி விக்கெட் கீப்பிங் கையுறையில் பதித்துள்ள முத்திரையுடன் உலக கோப்பை போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் முறைப்படி ஐ.சி.சி.க்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம். ஐ.சி.சி. விதிமுறைப்படி வீரர்கள் தனிப்பட்ட வர்த்தகம், மதம் மற்றும் இனம் சார்ந்த லோகாவை தான் பயன்படுத்தக்கூடாது. ஆனால் டோனி பயன்படுத்துவது அது சார்ந்தது இல்லை என்பது எங்களுக்கு தெரியும். முத்திரையை அகற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. எங்களுக்கு வேண்டுகோள் தான் விடுத்து இருக்கிறது. அறிவுறுத்தல் எதுவும் சொல்லவில்லை. அடுத்த ஆட்டத்திற்கு (நாளை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான) முன்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஐ.சி.சி. சீனியர் நிர்வாகிகளை சந்தித்து இது குறித்து பேசுவார்’ என்றார்.

இந்த விவகாரத்தில் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரென் ரிஜிஜூ டோனிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்த பிரச்சினை நாட்டு மக்களின் உணர்வுடன் தொடர்புடையதாகும். நாட்டின் நலனை மனதில் கொள்ள வேண்டும். டோனி வி‌‌ஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நியாயமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சுரே‌‌ஷ் ரெய்னா, மல்யுத்த வீரர் யோகே‌‌ஷ்வர் தத் உள்பட பலரும் டோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் மந்திரி பவாத் சவுத்ரி டோனிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘கிரிக்கெட் விளையாட தான் டோனி இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் ஒன்றும் மகாபாரத போருக்கு போகவில்லை. இந்த வி‌‌ஷயத்தை இந்திய மீடியாக்கள் முட்டாள்தனமாக விவாதித்து கொண்டு இருக்கின்றன. போரை பற்றி கவலைப்படும் சில இந்திய ஊடகங்கள் டோனியை ராணுவ வீரராக்கி அவரை சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது ரவன்டாவுக்கு அனுப்பி வையுங்கள்’ என்று சாடியுள்ளார்.

இதற்கிடையில் மான்செஸ்டரில் வருகிற 16-ந் தேதி நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் இந்திய அணியின் ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தும் போதும் வித்தியாசமான முறையில் களத்தில் கொண்டாட பாகிஸ்தான் அணியினர் திட்டமிட்டு இருந்ததாகவும், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டதாகவும், ஆனால் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது.
Tags:    

Similar News