செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர்தனே

Published On 2019-05-26 12:43 GMT   |   Update On 2019-05-26 12:43 GMT
இலங்கை அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய ஜெயவர்தனே, உலகக்கோப்பையில் பணிபுரிய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் ஜெயவர்தனே. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமையில் இரண்டு முறை மும்பை இந்தியன்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

கடந்த வருடம் குமார் சங்ககரா, அரவிந்த டி சில்வா மற்றும் ஜெயவர்தனே அடங்கிய குழு இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஒரு அறிக்கை தயாரித்திருந்தது. அதில் அதிக அளவில் உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அளித்திருந்தனர்.

ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ஜெயவர்தனே இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்பான விவகாரத்தில் தலையிடாமல் இருக்கிறார்.

தற்போது உலகக்கோப்பை தொடர் நடப்பதால், இலங்கை அணிக்கு உதவும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஜெயவர்தனே அதை மறுத்துவிட்டார்.



இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நான் ஏற்கனவே பல பணிகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒட்டுமொத்த முழு கட்டமைப்பு பற்றி என்னால் எதையும் சொல்ல முடியவில்லை என்றால், யுக்திகள் போன்ற விஷயத்தில் நான் தலையிட அங்கு ஏதும் இல்லை. அணியின் தேர்வு உள்பட எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இதனால் அங்கு வந்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை’’ என்றார்.
Tags:    

Similar News