செய்திகள்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: 24-வது கிராண்ட்சிலாமை செரீனா வில்லியம்ஸ் வெல்வாரா?

Published On 2019-05-26 08:48 GMT   |   Update On 2019-05-26 08:48 GMT
செம்மண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது. பெண்கள் பிரிவில் செரீனா சாதனைப் படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கடந்த ஜனவரி மாதம் மெல்போர்னில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் ஒசாகாவும் (ஜப்பான்) பட்டம் பெற்றனர்.

இந்த ஆண்டின் 2-வது கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது. ஜூன் 9-ந்தேதிவரை இந்த போட்டி நடக்கிறது.

உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் தீயெம் (ஆஸ்திரியா), அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

பெண்கள் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஒசாகா, நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப், கரோலினா, கெர்பர் மற்றும் 10-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.



பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நடால் இதுவரை 11 பட்டங்களை வென்றுள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 18-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக காத்து இருக்கிறார்.

ஜோகோவிச், பெடரர் ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக விளங்குவார்கள். பெடரர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்திலும், ஜோகோவிச் 15 பட்டம் வென்று 3-வது இடத்திலும் உள்ளனர்.



பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று முத்திரை பதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் இதுவரை 23 பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3 முறை கைப்பற்றி உள்ளார். அவருக்கு ஒசாகா, சிமோனா ஹாலெப், முகுருஜா போன்ற முன்னணி வீராங்கனைகள் கடும் சவாலாக இருப்பார்கள்.
Tags:    

Similar News