செய்திகள்

இத்தாலி ஓபன் டென்னிஸ் - ஸ்விடோலினாவை வீழ்த்தி அஸரென்கா 3-வது சுற்றுக்கு தகுதி

Published On 2019-05-15 21:34 GMT   |   Update On 2019-05-15 21:34 GMT
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் அவரது ‘ஹாட்ரிக்’ பட்ட கனவையும் தகர்த்தார்.
ரோம்:

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்ற 51-ம் நிலை வீராங்கனையான விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார். மழையால் தடைப்பட்டு நடந்த இந்த ஆட்டம் 2 மணி 14 நிமிடம் நீடித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் அவரது ‘ஹாட்ரிக்’ பட்ட கனவையும் தகர்த்தார்.

வெற்றிக்கு பிறகு அஸரென்கா அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. மழையால் ஆட்டம் பல முறை தடைப்பட்டு நடந்தது. ஒட்டுமொத்தத்தில் இது உயர்தரமான போட்டியாக இருந்தது. என்னுடைய செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டி தொடரில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்’ என்று தெரிவித்தார். இதேபோல் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags:    

Similar News