செய்திகள்

தோல்வி காயப்படுத்தியது: அடுத்த ஐ.பி.எல். போட்டியில் ஆடுவேன் - டோனி நம்பிக்கை

Published On 2019-05-13 07:45 GMT   |   Update On 2019-05-13 07:45 GMT
இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோல்வி அடைந்தது மிகவும் காயப்படுத்தியதாகவும் அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவதாகவும் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:

ஐ.பி.எல். பரபரப்பான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பையிடம் தோற்று 4-வது கோப்பையை இழந்தது.

இந்த சீசனில் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இறுதிப்போட்டிக்கு எப்படி நுழைந்தோம் என்று திரும்பி பார்க்கும்போது சிறப்பாக ஆடி இந்த இடத்திற்கு வந்ததாக தோன்றவில்லை. மிடில் ஆர்டர் வரிசை நன்றாக அமையவில்லை. இருந்தாலும் எப்படியோ சமாளித்து விட்டோம்.

தோல்வி எப்போதுமே காயப்படுத்தும். இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருக்கலாம்.

இறுதிப்போட்டி மிகவும் சிறப்பாக இருந்ததாக கருதுகிறேன். கடைசி பந்து வரை பரபரப்பு ஏற்பட்டது. இரு அணிகளிலுமே நிறைய வேடிக்கையான சம்பவம் நடந்தன. இரு அணிகளின் பக்கமும் கோப்பை கைமாறிக்கொண்டு இருந்தன. ஏனென்றால் இரு அணிகளுமே நிறைய தவறுகளை செய்தன. ஆனால் குறைந்த தவறுகள் செய்த அணி வெற்றி பெற்று இருக்கிறது.இறுதிப்போட்டியிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எப்போது தேவையோ அப்போது சரியாக விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

தவறுகள் எந்தெந்த இடங்களில் செய்தோம் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் உண்மையில் அதற்கு தற்போது நேரமில்லை. உலககோப்பை செல்ல வேண்டி இருக்கிறது.

அதற்கு பின் நேரம் கிடைக்கும்போது ஐ.பி.எல். தவறுகளை ஆராய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஐ.பி.எல். போட்டியில் உங்களை மீண்டும் காண முடியுமா? என்று டோனியிடம் டெலிவிசன் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஆம் நம்பிக்கை இருக்கிறது என்று பதில் அளித்தார்.



உலககோப்பையுடன் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக டோனியிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளையாடுவேன் என்று தெரிவித்ததால் ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர்.
Tags:    

Similar News