செய்திகள்

சென்னை அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

Published On 2019-04-26 14:08 GMT   |   Update On 2019-04-26 18:25 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #CSKvMI
ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் சுரெஷ் ரெய்னா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்

அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது டி காக் 15 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய எவின் லெவிஸ் 32 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.



ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 48 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 67 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 23 ரன்னுடனும், பொல்லார்டு 13 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. முரளி விஜய், வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே ரசிர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த வாட்சன் 8 ரன்னில் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா பந்தில் ரெய்னா 2 ரன்களிலும், அம்பதி ராயுடு ரன்ஏதும் எடுக்காமலும் குருணால் பாண்டியா பந்திலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் முரளி விஜய் நிலைத்து நிற்க மறுபக்கம் விக்கெட் வீழந்த வண்ணமே இருந்தது.

கேதர் ஜாதவ் 6 ரன்னிலும், ஷொரே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து விளையாடிய முரளி விஜய் 38 ரன்னில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே 11.4 ஓவரில் 66 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 6 விக்கெட்டுக்களை இழந்தது.

7-வது விக்கெட்டுக்கு பிராவோ உடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 99 ரன்கள் இருந்த போது மலிங்கா பந்து வீச்சில் பிராவோ வெளியேற அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 109 ரன்களில் ஆல் அவுட் ஆகி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #IPL2019 #CSKvMI
Tags:    

Similar News