செய்திகள்

நோ-பாலை கவனிக்கவில்லை: நடுவர்கள் மீது விராட்கோலி கடும் அதிருப்தி

Published On 2019-03-29 06:20 GMT   |   Update On 2019-03-29 06:20 GMT
நடுவர்கள் நோ-பாலை சரியாக கவனிக்கவில்லை என்றும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் விராட் கோலி அதிருப்தி தெரிவித்துள்ளார். #IPL2019 #ViratKohli
பெங்களூர்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று பெங்களூரில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 48 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 38 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்டே 32 ரன்னும், யுவராஜ்சிங் 23 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. டி.வில்லியர்ஸ் நிலைத்து நின்று விளையாடினார்.

பெங்களூருக்கு கடைசி 2 ஓவரில் 22 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய பும்ரா 5 ரன் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. களத்தில் டிவில்லியர்ஸ், துபே இருந்தனர். அந்த ஓவரை மலிங்கா வீசினார். முதல் பந்தில் துபே சிக்சர் அடித்தார். அடுத்து 4 பந்தில் 4 ரன் எடுக்கப்பட்டது.

கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. சிக்சர் அடித்தால் ஆட்டம் ‘டை’ ஆகும் சூழ்நிலை இருந்தது. அந்த பந்தை எதிர்கொண்ட துபே ரன் எதுவும் எடுக்கவில்லை. புல் டாசாக வீசப்பட்ட பந்தை துபே அடித்தபோதும் கீழேயே சென்றது.

இதனால் மும்பை 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி வீரர்கள் திரில் வெற்றி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன் குவித்தும் வீணானது.



அப்போது மலிங்கா கடைசி பந்தை நோ-பாலாக வீசியது டி.வி. ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது. அவர் கீரிசை விட்டு சில இன்ச் காலை வைத்து பந்தை வீசி இருந்தார். ஆனால் அதை நடுவர் கவனிக்க தவறி விட்டார்.

நடுவர் நோ-பாலை கவனித்து இருந்தால் ஒரு ரன் மற்றும் பிரீ-ஹிட் பெங்களூர் அணிக்கு கிடைத்து இருக்கும். இதனால் ஆட்டத்தின் முடிவும் மாறி இருக்கலாம்.

இதனால் பெங்களூர் கேப்டன் விராட்கோலி மற்றும் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் மைதானத்தில் ஒருவித ஆவேசத்துடன் நின்று இருந்தனர்.

இது தொடர்பாக கோலி நடுவர்களிடம் சென்று பேசினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தோல்வி குறித்து கோலி ஆதங்கத்துடன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறோம். கிளப் கிரிக்கெட் போட்டி அல்ல. கடைசி பந்தை நோ-பால் என்று அறிவிக்காதது கேலிக் குரியது.

நடுவர்கள் தங்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும். கடைசி பந்தை கிரீசை விட்டு சில இன்ச்சுகள் தள்ளி காலை வைத்து வீசப்பட்டுள்ளது. இது ஆட்டத்தை முற்றிலும் மாற்றி விட்டது. அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நடுவர்கள் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, உண்மையிலேயே நான் எல்லை கோட்டை தாண்டிய போது தான் நோ-பால் வீசப்பட்டது தெரியும்.

இதுபோன்ற தவறுகள் விளையாட்டுக்கு நல்லதல்ல. பும்ரா வீசிய 19-வது ஓவரில் ஒரு பந்து வைடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது வைடு பந்து கிடையாது.

இந்த ஆடுகளத்தில் 180 ரன் என்பது சவாலான இலக்கு கிடையாது. இந்த ஆடுகளத்தில் 200 ரன் இலக்குடன் செல்ல வேண்டும். ஆனாலும் எங்க ளது பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர்.

விராட்கோலி, டிவில்லியர்ஸ் பார்டன்ஷிப்பை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. எங்களது திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று நம்பினேன் என்றார். #IPL2019 #ViratKohli
Tags:    

Similar News