செய்திகள்

ஐபிஎல் - உலகக்கோப்பை இடையே 3 வார இடைவெளி உள்ளதால் பணிச்சுமை ஏற்பட வாய்ப்பில்லை- கேகேஆர்

Published On 2019-02-19 14:31 GMT   |   Update On 2019-02-19 14:31 GMT
ஐபிஎல் - உலகக்கோப்பை இடையே சுமார் 3 வார இடைவெளி இருப்பதால் வீரர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்ட வாய்ப்பில்லை என்று கேகேஆர் தெரிவித்துள்ளது. #IPL2019
ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கி, மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் மே 30-ந்தேதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

முக்கியமான தொடரான உலகக்கோப்பை தொடர் ஐபிஎல் முடிந்த உடன் வருவதால் வீரர்களின் பணிச்சுமை (Workload) கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஐபிஎல் உரிமையாளர்களிடம் பேசினோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டு தொடர்களுக்கும் இடையில் சுமார் மூன்று வார இடைவெளி இருப்பதால் பணிச்சுமைக்கு வாய்ப்பில்லை. மேலும், இதுகுறித்து எங்களுக்கு எந்தவித வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்படவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணியில் குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடுகிறார்கள். இவர்கள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் கூறுகையில் ‘‘பிசிசிஐ-யிடம் இருந்து இதுபோன்ற எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. ஐபிஎல் தொடர் போதுமான காலத்திற்கு முன்னதாகவே முடிவடைகிறது. மே 12-ந்தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கிறது. உலகக்கோப்பையில் இந்தியா ஜூன் 5-ந்தேதிதான் விளையாடுகிறது.

இதனால் போதுமான இடைவெளி இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் நாங்கள் எந்தவொரு வழிகாட்டி நெறிமுறைகளையும் பெறவில்லை” என்றார்.
Tags:    

Similar News