செய்திகள்

ரிஷப் பந்த் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்: விருத்திமான் சகா

Published On 2019-02-19 13:28 GMT   |   Update On 2019-02-19 13:28 GMT
நான் காயத்தில் இருக்கும்போது ரிஷப் பந்த் எனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார் என்று விருத்திமான் சகா தெரிவித்துள்ளார். #Saha
டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் கொல்கத்தாவைச் சேர்ந்த விருத்திமான் சகா விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். சிறப்பாக விக்கெட் கீப்பர் பணியை செய்ததுடன் ரன்களும் குவித்தார். இதனால் நீண்ட நாட்களாக சகா டெஸ்ட் அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்து தொடரின்போது தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் ரிஷப் பந்த் அணியில் இடம்பிடித்தார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை ரிஷப் பந்த் கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதற்கிடையே தோள்பட்டை காயத்தால் சுமார் 8 மாதமாக சகாவால் விளையாட முடியாமல் போனது. தற்போது காயம் குணமடைந்து இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட்டான சையத் முஸ்தாக் அலி தொடரில் விளையாட இருக்கிறார்.

எனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்ட ரிஷப் பந்த்-ஐ நான் போட்டியாளராக கருதவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘நான் காயத்தால் விளையாடாமல் இருந்த நிலையில் என்னுடைய இடத்தை ரிஷப் பந்த் கெட்டியாக பிடித்துக் கொண்டார். யாராக இருந்தாலும் அவர்களது வாய்ப்பை கெட்டியாக பிடிக்க நினைப்பார்கள். அதைத்தான் ரிஷப் பந்த் செய்துள்ளார்.

நான் ரிஷப் பந்த்-ஐ போட்டியாளராக கருதவில்லை. நான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றிருந்த போது ரிஷப் பந்த் உடன் நீண்ட நேரம் உரையாடினேன். அப்போது நாங்கள் ஆட்டத்திறன் மற்றும் தேர்வு குறித்து பேசினோம்’’ என்றார்.
Tags:    

Similar News