செய்திகள்

கோபா டெல் ரே காலிறுதி: முதல் லெக்கில் பார்சிலோனாவை 2-0 என வீழ்த்தியது செவியா

Published On 2019-01-24 10:33 GMT   |   Update On 2019-01-24 10:33 GMT
கோபா டெல் ரே கோப்பைக்கான காலிறுதி ஆட்டத்தின் முதல் லெக்கில் பார்சிலோனாவை 2-0 என வீழ்த்தியது செவியா. #Barcelona
கோபா டெல் ரே கோப்பைக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - செவியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணியும் அவரவர் சொந்த மைதானத்தில் தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டிகளில் எந்த அணி அதிக கோல் அடித்துள்ளதோ, அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

அதன்படி பார்சிலோனா - செவியா இடையிலான முதல் லெக் செவியாவிற்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் செவியா 2-0 என வெற்றி பெற்று பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தது.

ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் செவியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பப்லோ சராபியா 58-வது நிமிடத்திலும், விஸ்சாம் பென் யாட்டர் 76-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.



பார்சிலோனா தொடர்ந்து நான்கு முறை கோபா டெல் ரே கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருந்த பார்சிலோனாவிற்கு செவியா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறும் 2-வது லெக்கில் செவியாவிற்கு எதிராக மூன்று கோல் அடித்தால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பார்சிலோனா உள்ளது.
Tags:    

Similar News