செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா வன்முறையை தூண்டிவிடுகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Published On 2019-06-10 18:36 GMT   |   Update On 2019-06-10 18:36 GMT
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா கட்சி வன்முறையை தூண்டிவிடுகிறது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னரும் வன்முறை குறையவில்லை, மாநில அரசு வன்முறையை கட்டுப்படுத்த தவறிவிட்டது, சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறி மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவுரை அனுப்பியிருந்தது.

இதற்கு மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஒரு பதில் அனுப்பினார். அதில், தேர்தலுக்கு பின்னர் சில மோதல்கள் நடைபெற்றது. அனைத்து மோதல்கள் மீதும் தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக பொய்யான செய்திகளை பரப்புவதற்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிறது. மத்திய அரசும், பா.ஜனதா கட்சி தொண்டர்களும்தான் மேற்கு வங்காளத்தில் வன்முறையை தூண்டிவிடுகிறார்கள். எந்த மாநிலத்திலும் வன்முறையோ, கலவரமோ நடைபெற்றால் மத்திய அரசுக்கும் அதில் சமமான பொறுப்பு உள்ளது. எனவே மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.

இந்த மாநிலத்தில் வன்முறையை தூண்டிவிடுவதில் ஒரு திட்டமிட்ட சதி உள்ளது. நாட்டிலேயே அவர்களுக்கு எதிராக மம்தா பானர்ஜி ஒருவர் தான் குரல் கொடுக்கிறார் என்பதால் எனது குரலை முடக்குவதற்காகவே இந்த சதி நடைபெறுகிறது. அதன்மூலம் எங்கள் மாநில அரசையும் நீடிக்கவிடாமல் கவிழ்த்துவிடலாம் என சதி செய்கிறார்கள்.

அதற்காகவே மாநில அரசுக்கு ஒரு அறிவுரையை அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் நான் அதற்கெல்லாம் பதில் சொல்லப்போவதில்லை. தலைமைச் செயலாளர் இதுதொடர்பாக ஏற்கனவே பதில் அனுப்பிவிட்டார்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மாநில மந்திரியுமான பார்த்தா சட்டர்ஜி, மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ‘‘உண்மை நிலையை அறியாமலும், மாநில அரசின் அறிக்கையை கேட்காமலும் உள்துறை அமைச்சகம் ஒரு முடிவுக்கு வந்து, அறிவுரை வழங்கியுள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் எங்களது கடும் ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கிறோம். அந்த அறிவுரையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்’’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News