செய்திகள்

பாராளுமன்ற கூட்டத்தொடரில் 38 சட்டமசோதாக்கள் தாக்கல்- மத்திய மந்திரி தகவல்

Published On 2019-06-09 02:05 GMT   |   Update On 2019-06-09 02:05 GMT
பாராளுமன்ற கூட்டத்தொடரில் 38-க்கும் மேற்பட்ட சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.
ஹுப்பள்ளி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதுபற்றி கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி விமான நிலையம் வந்த பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 38-க்கும் மேற்பட்ட சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது, முத்தலாக் தடை உள்பட முக்கியமான பிரச்சனைகளுக்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் அனைத்து சட்டமசோதாக்களும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

நாங்கள் ஏற்கனவே எதிர்க்கட்சிகளை சந்தித்து பேசி உள்ளோம். பாராளுமன்ற கூட்டம் சுமுகமாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

கர்நாடக மாநிலத்தில் அனைத்து வளர்ச்சி பணிகளும் முடங்கி இருப்பதை பார்க்கும்போது இங்கு மாநில அரசு செயல்படுவதாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News