செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் எழுச்சிக்கு மம்தாவே காரணம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2019-06-09 01:06 GMT   |   Update On 2019-06-09 01:06 GMT
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் எழுச்சிக்கு மம்தாவே காரணம் என மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 18 இடங்களை கைப்பற்றி வலுவான அடித்தளத்தை அமைத்து உள்ளது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. பா.ஜனதாவின் இந்த எழுச்சிக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜியே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.



இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் எழுச்சிக்கு மம்தா பானர்ஜி மட்டுமே காரணம். அவர் அப்பட்டமான சிறுபான்மை பிரசாரத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், பா.ஜனதா மேற்கு வங்காளத்தில் காலூன்றி இருக்காது’ என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகளை அகற்றுதல் மற்றும் அந்த கட்சிகளின் தலைவர்களை வேட்டையாடுதல் என்ற மம்தாவின் கொள்கைகளால்தான் பா.ஜனதா எழுச்சி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய சோமன் மித்ரா, எனவே இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டுவதற்கு மம்தாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

ஒரு காலத்தில் காங்கிரசை பலவீனப்படுத்துவதற்காக பா.ஜனதாவை வலுப்படுத்தியவர்கள், இன்று தனது சொந்த கட்சியின் தலைவர்களை பாதுகாக்கவே போராடுவதாகவும் மம்தாவை அவர் மறைமுகமாக சாடினார்.
Tags:    

Similar News