செய்திகள்

பா.ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேற வேண்டும்- லாலு கட்சி அழைப்பு

Published On 2019-06-04 10:37 GMT   |   Update On 2019-06-04 10:37 GMT
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேற வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தள கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பாட்னா:

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சிகளின் கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து தேர்தலில் இக்கூட்டணி பீகாரில் அமோக வெற்றி பெற்றது.

ஆனால், மத்திய மந்திரி சபையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு மந்திரி பதவி தருவதாக பா.ஜனதா கூறியது. அதை முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஏற்கவில்லை. 2 மந்திரி பதவி கேட்டு அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே பீகாரில் தனது மந்திரி சபையை நிதிஷ்குமார் விரிவுபடுத்தினார். ஆனால், அதில் சேர பா.ஜனதா மறுத்துவிட்டது. எனவே, அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்கவில்லை. இத்தகைய பிரச்சனைகளால் இரு கட்சிகளுக்கு இடையே மனக்கசப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைத்துவிட்டது. எனவே மக்களுக்கு இனி நிதிஷ்குமார் பயன்படமாட்டார். எனவே அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.

ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட மற்ற மாநில கட்சியினர் சேர்ந்து 2020-ம் ஆண்டு வர இருக்கிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
Tags:    

Similar News