செய்திகள்
மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பதிவு- பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்
மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான பதிவை வெளியிட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியை மராட்டிய மாநில அரசு இடமாற்றம் செய்துள்ளது.
மும்பை:
மும்பை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் நிதி சவுத்ரி. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான பதிவை வெளியிட்டு இருந்தார்.
“உலகம் முழுவதும் காந்தி சிலைகளை அகற்ற வேண்டும். ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படத்தை அகற்ற வேண்டும். 30.1.1948 சம்பவத்துக்காக கோட்சேவுக்கு நன்றி” என்று அவர் பதிவில் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், நிதி சவுத்ரியை மராட்டிய மாநில அரசு இடமாற்றம் செய்துள்ளது. அவர் குடிநீர் வழங்கல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.