செய்திகள்

மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தனியாக போராடினார் - பிரியங்கா

Published On 2019-05-27 04:44 GMT   |   Update On 2019-05-27 04:44 GMT
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தனியாக போராடியதாக பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. தோல்வி பற்றி ஆராய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் 4 மணி நேரமாக காரசார விவாதம் நடந்துள்ளது.

அதுபற்றி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-

காரிய கமிட்டி கூட்டத்தில், காங்கிரசின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முன்வந்தார். தனது குடும்பத்தை சேர்ந்த வேறு யாரும் அந்த பதவிக்கு வருவதை, தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். வேறு யாராவது காங்கிரஸ் தலைவராக இருக்க முடியாதா? என்றும் அவர் கேட்டார்.

ராஜினாமா முடிவை திரும்பப் பெறுமாறு அவரை சில மூத்த தலைவர்கள் வற்புறுத்தினர். அப்போது, வேதனை கலந்த முகத்துடன் காட்சி அளித்த பிரியங்கா குறுக்கிட்டு ஆவேசமாக பேசினார். “பிரதமர் மோடிக்கு எதிராக என் சகோதரரை தனியாக போராட விட்டுவிட்டு, ஒதுங்கிக்கொண்டீர்கள். நீங்கள் எல்லாம் அப்போது எங்கே இருந்தீர்கள்? மோடிக்கு எதிராக ரபேல் விவகாரத்தையும், ‘காவலாளி ஒரு திருடன்’ என்ற கோஷத்தையும் என் சகோதரர் எழுப்பியபோது, அவரை யாரும் ஆதரிக்க முன்வரவில்லை. காங்கிரசின் தோல்விக்கு காரணமான அனைவரும் இந்த அறையில் இருக்கிறார்கள்” என்று பிரியங்கா கூறினார்.

மேலும், “ராஜினாமா செய்வது, பா.ஜனதாவின் வலையில் விழுந்ததுபோல் ஆகிவிடும்” என்று கூறி, ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ராகுலிடம் அவர் வலியுறுத்தினார்.

ஒரு கட்டத்தில், ஜோதிர் ஆதித்ய சிந்தியா எழுந்து, “கட்சியின் மாநில தலைமைகளை வலுப்படுத்த வேண்டும்” என்று யோசனை தெரிவித்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை பார்த்த ராகுல் காந்தி, “தனது மகனுக்கு சீட் கொடுக்காவிட்டால், ராஜினாமா செய்து விடுவேன் என்று ப.சிதம்பரம் மிரட்டினார்” என்று குற்றம் சாட்டினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “ப.சிதம்பரம், மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் கட்சி நலன்களை புறந்தள்ளிவிட்டு, தங்கள் மகன்களை முன்னிறுத்துவதில் அக்கறை காட்டினர்.

தனது மகனுக்கு சீட் வாங்க முடியாவிட்டால், தான் எப்படி முதல்-மந்திரியாக இருக்க முடியும்? என்று கமல்நாத் கேட்டார். அசோக் கெலாட், தனது மகன் போட்டியிட்ட ஜோத்பூரில் 7 நாட்கள் பிரசாரம் செய்தார். மற்ற தொகுதிகளுக்கு அவர் செல்லவில்லை.

ரபேல் பற்றிய எனது பிரசாரத்தை கட்சியில் யாரும் ஆதரிக்கவில்லை. மோடி மீது நான் ஊழல் குற்றச்சாட்டு கூறியதை இங்கு இருக்கும் எத்தனைபேர் ஆதரித்தீர்கள்?” என்று கேட்டார்.

அப்போது, சில தலைவர்கள் கையை உயர்த்தினர். தாங்கள், ‘ரபேல்’ விவகாரம் பற்றி பேசியதாக அவர்கள் கூறினர். ஆனால் அதை ராகுல் காந்தி நிராகரித்தார்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தில் பிரியங்கா கடைசிவரை பங்கேற்றார். ராகுல் காந்தி, பாதியில் வெளியேறினார்.
Tags:    

Similar News