செய்திகள்
நான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி
டெல்லியில் நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அரசியல் சாசன புத்தகத்தை வணங்கி, உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:-
யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர். 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக 25 சதவீதம் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். இந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி.
புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம் மாற்றுவோம். நான் உங்களில் ஒருவன், உங்களுக்கு சமமானவன். அனைவரின் ஆலோசனைகளை கேட்டறிந்து புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான எங்கள் பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பாராளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். இது பெண்களின் சக்தியால் சாத்தியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.