செய்திகள்

அடுத்தடுத்து ஆட்சி - பா.ஜனதா புதிய சாதனை

Published On 2019-05-23 07:27 GMT   |   Update On 2019-05-23 07:27 GMT
அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது உறுதியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.
புதுடெல்லி:

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துள்ளது.

இந்திராகாந்தி ஆட்சியின்போது தான் முதல் முதலாக ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து காங்கிரசின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அதன் பிறகு காங்கிரசுக்கு எதிராக வலிமையான கட்சி உருவாகாமல் இருந்தது. இந்த நிலையில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா கட்சி மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தது.



மத்தியில் காங்கிரசை வீழ்த்திய வாஜ்பாய் 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியை கொடுத்தார். அவர் 2 தடவை பிரதமர் பதவியை ஏற்றார். ஆனால் குறைந்த ஆண்டுகள்தான் அவரால் மத்தியில் ஆட்சி செய்ய முடிந்தது.

இந்த நிலையில் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு கடந்த 2014-ம்ஆண்டு பிரதமர் மோடி முடிவுரை எழுதினார். 2019 வரை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த மோடி மீண்டும் தற்போது வெற்றி பெற்று இருக்கிறார்.

இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவி வகிப்பது உறுதியாகி இருக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.

அந்த வகையில் மோடி இந்திய அரசியலில் காங்கிரசுக்கு எதிராக புதிய சாதனையை உருவாக்கி இருக்கிறார்.

Tags:    

Similar News