செய்திகள்

உத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை

Published On 2019-05-23 07:09 GMT   |   Update On 2019-05-23 07:09 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்த மெகா கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
லக்னோ:

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்களின்படி, பாஜக 48 இடங்களில் முன்னிலை வகித்தது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி பின்தங்கியது. மெகா கூட்டணி 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.

நேரம் செல்லச் செல்ல பாஜக முன்னிலை பெற்ற தொகுதிகள் அதிகரித்தன. மதிய நிலவரப்படி 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றிருந்தது. 19 தொகுதிகளில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது.



வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 55 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி பின்னடவை சந்தித்துள்ளார். அமேதியில் ஸ்மிரிதி இரானி முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்ததால், கடும் போட்டி நிலவுகிறது.

ரேபரேலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதேபோல் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), மேனகா காந்தி (சுல்தான்பூர்), சந்தோஷ் காங்வார் (பரேலி) ஆகியோரும் முன்னிலை பெற்றிருந்தனர். சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் (மெயின்புரி), அவரது மகன் அகிலேஷ் யாதவ் (ஆசம்கர்), அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் (கன்னாஜ்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 2014 பொதுத்தேர்தலில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News