செய்திகள்

முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்

Published On 2019-05-23 06:29 GMT   |   Update On 2019-05-23 06:29 GMT
ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளைத் தாண்டி, பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 11 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 322 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.

பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிப்பதால், பங்குச்சந்தைகளும் எழுச்சி பெற்றன. மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள், முதலீட்டார்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் இன்று காலை முதலே விறுவிறுப்பாக வர்த்தகம் நடைபெற்றது.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 886.56 புள்ளிகள் உயர்ந்து 39,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257.95 புள்ளிகள் உயர்ந்து, 11,995.85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது.



அதன்பின்னர் மேலும் எழுச்சி பெற்று, சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது இதுவே முதல் முறையாகும். இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 12000 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் ஆனது. அதன்பின்னர் சற்று சரிவடைந்தது.

யெஸ் பேங்க், இந்தஸ்இந்த் பேங்க், எல்அண்ட்டி, எஸ்பிஐ, ஐசிஐசிடி பேங்க், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், எச்டிஎப்சி ட்வின்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 8 சதவீதம் அளவிற்கு உயர்ந்தன. வேதாந்தா, ஐடிசி, டிசிஎஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 14 காசுகள் உயர்ந்து, 69.51 ரூபாயாக இருந்தது. அதன்பின்னர் சற்று சரிவடைந்தது. 
Tags:    

Similar News