செய்திகள்

திருப்பதியில் ரூ.100 கோடியில் புதிய பஸ் நிலையம்

Published On 2019-05-22 05:24 GMT   |   Update On 2019-05-22 05:24 GMT
திருப்பதி அடுத்த பாலாஜி பால் பண்ணை அருகே ரூ.100 கோடியில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
திருமலை:

திருப்பதியில் அலிபிரி பஸ் நிலையம், பாலாஜி பஸ் நிலையம், ஏடுகொண்டலு பஸ் நிலையம், சென்ட்ரல் பஸ் நிலையம், லீலா மகால் சர்க்கிள் பஸ் நிலையம், கபிலேஸ்வரசாமி கோவிலை அடுத்த நந்தி சர்க்கிள் அருகில் உள்ள பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் பஸ் நிலையம் உள்ளது. அனைத்து பஸ் நிலையங்களிலும் பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பதியில் மேலும் ஒரு பஸ் நிலையத்தை அமைக்க ஆந்திர மாநில அரசு முடிவெடுத்து திருப்பதியை அடுத்த பாலாஜி பால் பண்ணை அருகே 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது.

அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அந்த புதிய பஸ் நிலையம், சென்னை மாதாவரத்தில் உள்ள பஸ் நிலையத்தைப்போல் ஒரு முன்மாதிரி பஸ் நிலையமாக அமைக்கப்பட உள்ளது.

புதிய பஸ் நிலையம் 3 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்படும். அங்கு ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள் நடத்த வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அங்கு பயணிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, விடுதி வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் மக்கள் பஸ்களை கண்காணிக்க அதிக எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்தப்படும்.

புதிய பஸ் நிலையத்தில் திருப்பதி மாநகர பஸ்கள் மற்றும் ஐதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் குளிர்சாதன வசதிகள் கொண்ட பஸ்கள், விரைவு பஸ்கள் நிறுத்தப்படும். சாதாரண பஸ்கள் ஏற்கனவே நிறுத்தப்படுகின்ற அந்தந்த பஸ் நிலையங்களில் நிறுத்தப்படும்.

திருப்பதியில் விரைவில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. கட்டுமானப் பணிகளுக்காக தளவாட எந்திரங்களும், மூலப்பொருட்களும் வந்துள்ளன.
Tags:    

Similar News