செய்திகள்

கருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

Published On 2019-05-22 01:31 GMT   |   Update On 2019-05-22 01:31 GMT
கருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் தொடர்பான டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:

கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டம், 2015-ம் ஆண்டு ஜூலை 1 முதல், முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல் கவுதம் கெய்தான் மீது கருப்பு பண ஒழிப்பு சட்ட வழக்கு பாய்ந்தது.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கவுதம் கெய்தான் மனு தாக்கல் செய்தார். கருப்பு பண ஒழிப்பு சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தியதை அனுமதிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கெய்தான் மீதான நடவடிக்கைக்கும் இடைக்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. அம்மனு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவு, இதுபோன்ற மற்ற வழக்குகளையும் பாதிக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முறையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். கவுதம் கெய்தானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News