செய்திகள்

சொத்துகுவிப்பு வழக்கில் முலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை - சிபிஐ தகவல்

Published On 2019-05-21 10:24 GMT   |   Update On 2019-05-21 10:24 GMT
சொத்துகுவிப்பு வழக்கில் முலாயம் சிங் மற்றும் அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி:

சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் முலாயம் சிங், அவரது மகன் அகிலேஷ் யாதவ். உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகளான அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதுர்வேதி என்பவர் 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளனர்.

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

 


இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த குற்றச்சாட்டு உண்மையா என்பது குறித்து விசாரிக்கும்படி 2007-ல் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முலாயம் சிங் தரப்பில் 2012-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

இதற்கு முலாயம் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தங்கள் குடும்பத்தின் மீது வீண்பழி சுமத்தப்பட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முலாயம்சிங், அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை. விசாரணையின் போது எந்தவித முதன்மையான ஆதாரமும் கிடைக்க வில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக முலாயம் சிங், அகிலேஷ் யாதவிடம் 2013 ஆண்டுக்கு பிறகு எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.

இவ்வாறு சி.பி.ஐ தான் தாக்கல் செய்த புதிய பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News