செய்திகள்

கிர்கிஸ்தானில் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு - சுஷ்மா சுவராஜ் பங்கேற்பு

Published On 2019-05-20 09:07 GMT   |   Update On 2019-05-20 09:07 GMT
வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பதவிக்காலத்தில் இறுதிமுறை வெளிநாட்டு பயணமாக ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் செல்கிறார்.
புதுடெல்லி:

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.
 
ஷங்காய் அமைப்பில் பார்வையாளர்களாக இந்தியா 2005-ம் ஆண்டிலும் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டிலும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த ராணுவ மந்திரிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விவாதித்தனர். அதில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.



இதன் அடுத்தக்கட்டமாக ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு வரும் 21, 22 தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பதவிக்காலத்தில் இறுதிமுறை வெளிநாட்டு பயணமாக கிர்கிஸ்தான் நாட்டுக்கு செல்கிறார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்த சுஷ்மா சுவராஜ் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் இன்னல்களை களைவதிலும் சிறப்பாக பணியாற்றி அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றார்.

கடந்த ஆண்டு அவர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிறுநீரகங்களை தானமாக அளிப்பதற்கு பலர் முன்வந்தது நினைவிருக்கலாம்.
 
Tags:    

Similar News