செய்திகள்

அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவறாக இருப்பதில்லை - உமர் அப்துல்லா

Published On 2019-05-20 06:19 GMT   |   Update On 2019-05-20 06:19 GMT
காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா,தேர்தலுக்கான அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவறாக இருப்பதில்லை என கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்:

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இதில் பாஜக அதிக இடங்கள் பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியிடப்பட்டுள்ளது.  இந்த கருத்துக்கணிப்புகள் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இது குறித்து கூறுகையில்,  'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது.


மக்களின் விருப்பம் என்ன என்பது 23ம் தேதி தெரிந்து விடும். அந்த முடிவுக்கு ஏற்ப எங்களது நடவடிக்கைகள் அமையும்' என கூறினார்.

இதையடுத்து காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கருத்துக்கணிப்புகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்த பின்னர் வரும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறாக இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் இருந்தும், தொலைக்காட்சிகளில் இருந்தும் நாம் வெளிவர வேண்டும். தேர்தல் முடிவுகளுக்காக 23ம் தேதி வரை அனைவரும் காத்திருக்க தான் வேண்டும்.

ஒரு அரசியல் கட்சி கருத்துக்கணிப்புகளில் வெற்றி பெறும் சூழலை உருவாக்கவில்லை என்றால், அக்கட்சி ஏற்கனவே தேர்தல் ஆட்டத்தில் தோற்றுவிட்டது என்று தான் அர்த்தமாகும்.     

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.



 
Tags:    

Similar News