செய்திகள்
அஸ்கார்

பயங்கரவாத அமைப்புகளுக்கு பேஸ்புக்கில் ஆதரவு தெரிவித்த கேரள வாலிபர் கைது

Published On 2019-05-14 07:00 GMT   |   Update On 2019-05-14 07:00 GMT
ஐ.எஸ்., ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளுக்கு பேஸ்புக்கில் ஆதரவு தெரிவித்த கேரள வாலிபரை மலப்புரம் போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவின் காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேர் வளைகுடா நாடுகளுக்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததை மத்திய உளவு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கேரளாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணிகளும் நடந்ததை தேசிய புலனாய்வு அதிகாரிகள் அறிந்து கொண்டனர். இதில் ஈடுபட்ட ரியாஸ் அபுபக்கர் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து ரியாஸ் அபுபக்கருக்கு துணைபுரிந்த நபர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன.

இதற்காக கேரளாவில் இருந்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோர் கணக்குகளும் கண்காணிக்கப்பட்டன. இதில் கேரளாவின் மஞ்சேரியை அடுத்த ஆனக்காயம் பகுதியில் இருந்து ஒருவர் ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் இந்த நபர் அடிக்கடி இந்த அமைப்புகளின் கொள்கைகள் பற்றி கருத்து பதிவிட்டதோடு, இவற்றின் செயல்பாடுகளையும் பாராட்டி வந்தார். இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மட்டுமின்றி மேலும் பல பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இதையடுத்து மலப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் ஐ.எஸ். மற்றும் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் வாலிபரின் முகவரியை கண்டு பிடிக்கும் பணி நடந்தது.

இதில் அந்த வாலிபர் மஞ்சேரியை அடுத்த ஆனக்காயத்தைச் சேர்ந்த அஸ்கார்(வயது47) என்பது தெரிய வந்தது. அவரை மலப்புரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் மஞ்சேரி முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


Tags:    

Similar News