பிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம் - அகிலேஷ் யாதவ்
சுல்தான்பூர்:
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சுல்தான்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் பகுஜன்சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் தொடர்பு இருப்பதாக மோடி திடீரென சொல்கிறார். காங்கிரசை நாங்கள் ஆதரிக்கவில்லை.
காங்கிரஸ் தனியாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி ஓரளவு வாக்குகளை பிரிக்கும். இதனால் பா.ஜனதாவுக்குத்தான் தோல்வி ஏற்படும்.
இந்த தோல்வி பயத்தில் தான் பிரதமர் மோடி தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார்.
உத்தரபிரதேசத்தில் மெகா கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள்தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.
மக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். எனவே வரலாறு காணாத வெற்றியை பெறுவோம். இதன்மூலம் நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்பதை எங்களது கூட்டணிதான் முடிவு செய்யும்.
எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும் என்பதை அறிந்துள்ள பிரதமர் மோடி எங்களை பிரிக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்காது. பா.ஜனதாவுக்கு இனி பின்னடைவுதான்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார். அவற்றில் பெரும் பாலானவை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவரது வாக்குறுதிகள் இன்று அவருக்கு எதிராக திரும்பியுள்ளன.
எனவே உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா தோல்வி அடைவதை தவிர்க்க முடியாது.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார். #Akhileshyadav