செய்திகள்

ரபேல் விவகாரம்- புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு

Published On 2019-05-04 05:57 GMT   |   Update On 2019-05-04 06:02 GMT
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. #RafaleReviewPetitions
புது டெல்லி:

விமானப் படைக்கு, ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சீராய்வு மனுக்களுடன், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பத்திரிகைகளில் வந்த சில செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

இந்த கூடுதல் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.



இதையடுத்து தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன், ரபேல் சீராய்வு மனுக்கள் கடந்த ஏப்ரல் 30ம் தேதி  விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்வதற்கு 4 வாரம் அவகாசம் வழங்கும்படி மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதிகள், மே 6-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் மே 6-ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரத்தினை தாக்கல் செய்துள்ளது. இதில், ‘மத்திய தணிக்கைத்துறை விளக்கத்தின் மூலம் ரபேல் போர் விமானம் தொடர்பாக எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், திருடப்பட்ட ஆவணங்களை கொண்டு மறு சீராய்வு மனுவை விசாரிக்க வேண்டிய  அவசியமில்லை. மேலும் புதிய ரபேல் ஒப்பந்தத்தின் மூலம் எவ்வித இடைப்பேச்சுவார்த்தைக்கும் வழிவகுக்கவில்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  #RafaleReviewPetitions
Tags:    

Similar News