செய்திகள்
லிபியாவில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் - சுஷ்மா வலியுறுத்தல்
லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற முயற்சிக்கும் உச்சக்கட்ட மோதல் நடைபெறும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். #Tripolitravelban #sushmaswaraj
புதுடெல்லி:
லிபியா நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிழக்கு பகுதியில் இயங்கிவரும் போட்டி அரசு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. போட்டி அரசின் லிபியா தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி பகிக்கும் கலிபா ஹஃப்டர் தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை மற்றும் தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்.
லிபியா அரசுப்படைகளுக்கும் கலிபா ஹஃப்டர் தலைமையிலான உச்சக்கட்ட மோதலில் இதுவரை 200-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், திரிபோலியில் நாளுக்குநாள் நிலைமை மோசமாகி வருவதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் அறிவுறுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டும் இன்னும் 500-க்கும் அதிகமான இந்தியர்கள் திரிபோலியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. நிலைமை மேலும் மோசமடைந்தால் அங்கிருப்பவர்களை அழைத்து வருவது சிரமமாகி விடும். எனவே, திரிபோலியில் இருக்கும் உங்களது உறவினர்களையும், நண்பர்களையும் உடனடியாக தாய்நாட்டுக்கு திரும்புமாறு நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Tripolitravelban #sushmaswaraj