செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டாதது ஏன்? - பிரதமர் மோடி மீது மம்தா பானர்ஜி தாக்கு

Published On 2019-04-09 23:12 GMT   |   Update On 2019-04-09 23:12 GMT
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டாதது ஏன்? தேர்தலுக்காகவே இந்த பிரச்சினையை எடுக்கிறார் என்று மம்தா பானர்ஜி கூறினார். #MamataBanerjee #PMModi
ராய்கஞ்ச்:

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நேற்று தனது மாநிலத்தில் ராய்கஞ்ச், இஸ்லாம்பூர் உள்பட சில இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

வன்முறைகள் மற்றும் குழு கொலைகள் மூலம் அரசியலுக்குள் வந்தவர் மோடி. அவர் பாசிஸ்டுகளின் ராஜா. அடால்ப் ஹிட்லர் உயிரோடு இருந்திருந்தால், மோடியின் நடவடிக்கைகளை பார்த்து தற்கொலை செய்துகொண்டிருப்பார்.

பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுதியாக போராட தவறிவிட்டது. அதனாலேயே பா.ஜனதா படிப்படியாக வலுவடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க விரும்பினால் மற்றவர்களின் உதவியை நாட வேண்டும்.



மோடியை வெளியேற்றவே ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணிகள் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மோடி வெளியேற்றப்பட்டதும் நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க பணியாற்றுவோம். கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிரான தனது போராட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடாது.

கடந்த 5 ஆண்டுகளாக மோடியால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட முடியவில்லை. ஆனால் தேர்தல் வரும்போதெல்லாம் அவர் இந்த பிரச்சினையை எடுப்பார். மக்கள் முட்டாள்கள் இல்லை. ஒவ்வொரு முறையும் உங்களால் மக்களை ஏமாற்ற முடியாது.

ராணுவமே அவருக்கு சொந்தமானதுபோல ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளின் பெயரால் மோடி இப்போது ஓட்டு கேட்கிறார். அது அவர் ஆற்றிய ராணுவ சேவைக்கான மானியமா? ஆயுதப்படைகள் அனைவருக்கும் சொந்தமானது. இது நமது பெருமை.

உளவுப்பிரிவினர் தாக்குதல் குறித்து தகவல் தெரிவித்த பின்னரும் புலவாமா தாக்குதலில் இத்தனை வீரர்கள் கொல்லப்பட்டது ஏன் என்பதற்கு அவர் முதலில் பதில் கூற வேண்டும்.

நரேந்திர மோடி துரியோதனன் என்றால் அமித்ஷா துச்சாதனன். இருவரும் சேர்ந்து நாட்டின் சுதந்திரத்தை பறிக்கப் பார்க்கிறார்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
Tags:    

Similar News