செய்திகள்

பா.ஜ.க.வினரின் கன்னத்தில் அறையுங்கள் - ஜே.டி.எஸ். கட்சி எம்.எல்.ஏ. பேச்சுக்கு எடியூரப்பா கண்டனம்

Published On 2019-03-25 05:23 GMT   |   Update On 2019-03-25 05:23 GMT
பா.ஜனதாவினரை கன்னத்தில் அறையுங்கள் என்று கூறிய சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். #Yeddyurappa #ShivalingeGowda
பெங்களூரு:

வரும் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா, ஜே.டி.எஸ். வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

அவரை ஆதரித்து அந்த கட்சியின் அரிசிக்கெரே தொகுதி எம்.எல்.ஏ. சிவலிங்க கவுடா ஹாசனில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரத்தின்போது சிவலிங்க கவுடா பேசிய வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. பேசியிருப்பதாவது:-

சிவலிங்க கவுடா

பிரதமர் நரேந்திரமோடி, கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பரபரப்பாக பேசி இருக்கிறார். நான் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் மீட்பேன். நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன். விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை உருவாக்கி, அவர்களை காப்பாற்றுவேன் என்று சரமாரியாக வாக்குறுதிகளை அளித்தார். அதில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். விவசாயிகளும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வங்கிகளில் வாசலில் நின்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் பா.ஜனதாவினர் மோடி வாழ்க என்று முழக்கம் எழுப்பிக் கொண்டு வலம் வருகின்றனர்.

மோடிக்கு வாங்கு கேட்டு வரும் பா.ஜனதாவினரின் கன்னத்தில் நாலு அறைவிட்டு, மோடி வங்கியில் போடுவதாக சொன்ன 15 லட்ச ரூபாய் எங்கே? என்று தைரியமாக கேளுங்கள்.

கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இந்த தேர்தலில் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேளுங்கள். மக்கள் அமைதியாக இருப்பதால் தான் அவர்கள் பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.

இவ்வாறு அந்த வீடியோவில் சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. ஆவேசமாக பேசி உள்ளார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் பா.ஜனதாவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவரை கடுமையாக விமர்சித்து பா.ஜனதாவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சிவலிங்க கவுடாவின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோடி வாக்கு கேட்டு வந்தால் கல்லெறியுங்கள் என்று மக்களை தூண்டிவிடும் வகையில் பேசினார். தற்போது கன்னத்தில் அறையுங்கள் என்று பேசி வருகிறார்.

முதல் மந்திரி குமாரசாமியின் ஆட்சியில் எம்.எல்.ஏக்கள் குண்டர்களை போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதாவினருக்கும், மோடிக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பேசியுள்ள சிவலிங்க கவுடா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார். #Yeddyurappa #ShivalingeGowda
Tags:    

Similar News