செய்திகள்

நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது லண்டன் நீதிமன்றம்

Published On 2019-03-19 04:01 GMT   |   Update On 2019-03-19 06:19 GMT
பணமோசடி வழக்கில் இந்திய அரசால் தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்த லண்டன் நீதிமன்றம், அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. #NiravModiExtradition #LondonCourt
லண்டன்:

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக தெரியவந்தது. அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

அத்துடன் நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.



இதையடுத்து நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அவரை கைது செய்தபிறகு, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கும். நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும்.  #NiravModiExtradition #LondonCourt
Tags:    

Similar News