செய்திகள்
தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊனமுற்றோர், முதியோர் 5,19-ந்தேதி தரிசனம் செய்ய ஏற்பாடு

Published On 2019-02-02 05:55 GMT   |   Update On 2019-02-02 05:55 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊனமுற்றோர், முதியவர்கள் சிறப்பு தரிசனத்திற்கு பிப்ரவரி 5-ந்தேதி, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Tirupati
திருமலை:

திருப்பதி-திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைபேசி மூலமாக குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார்.

வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி விழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5.30 மணிமுதல் காலை 9 மணிவரை சூரியஜெயந்தி விழா நடைபெறும். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் விழாவாகும். தொடர்ந்து 7 வாகனங்களில் சாமி ஊர்வலம் நடைபெறும்.

இந்த விழா ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ தலைமையில் நடந்து வருகிறது.

மேலும் ஊனமுற்றோர், முதியவர்கள் சிறப்பு தரிசனத்திற்கு பிப்ரவரி 5-ந்தேதி, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 மாத குழந்தை முதல் 1 வயது குழந்தை வரை அவர்கள் பெற்றோர்களுடன் பிப்ரவரி 6-ந்தேதி, 20-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீனிவாச மங்காபுரத்தில் கல்யாண வெங்கடாசலபதி கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா பிப்ரவரி 24-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை நடைபெறும். திருப்பதி கபிலேஸ்வரர் சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிப்ரவரி 25-ந்தேதி முதல் மார்ச் 6-ந்தேதி வரை நடைபெறும். மேலும் இந்த ஆண்டு ரூ.60 லட்சம் மதிப்பில் தலைமுடி செலுத்தும் கல்யாண கட்டா அலுவலக பவனம், காலணிகள் வைக்கும் அறைகள் ஆகியவை புதிதாக கட்டப்பட உள்ளது. கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் மட்டும் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.81 கோடியே 88 லட்சமாகும்.

இந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் ரூ.86 கோடி 12 லட்சம் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். அதேபோல், அன்னபிரசாதம் கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் மட்டும் 49 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2019) 43 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் மட்டும் 83 லட்சத்து 49 ஆயிரம் லட்டு பிரசாதங்களும், இந்த ஆண்டு (2019) 94 லட்சத்து 47 ஆயிரம் லட்டு பிரசாதங்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #Tirupati
Tags:    

Similar News