செய்திகள்

தூய்மை கங்கா திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் ஏலம்

Published On 2019-01-22 10:29 GMT   |   Update On 2019-01-22 10:29 GMT
நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அவருக்கு பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட சுமார் 1900 பரிசுப் பொருட்கள் வரும் 27-30 தேதிக்குள் டெல்லியில் ஏலம் விடப்படுகின்றன. #GiftsreceivedbyModi #cleanGangaproject
புதுடெல்லி:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற பின்னர் இந்தியாவின் 14-வது பிரதமராக 16-5-2014 அன்று நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பின்னர் உள்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதும் அவருக்கு நினைவுப்பரிசாக விலைமதிப்புள்ள பொருட்களை பல பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக அளித்துள்ளனர்.

ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், மேலங்கிகள், இசைக் கருவிகள் உள்ளிட்ட அந்த பரிசுப்பொருட்கள் எல்லாம் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கு வைக்கப்பட்டுள்ள சுமார் 1900 பரிசுப் பொருட்கள் வரும் 27, 28 தேதிகளில் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்படுகின்றன.

தொடர்ந்து, 29,30 தேதிகளில் இணையதளம் வழியாக ஆன்லைன் ஏலமும் நடைபெறுகிறது. இவ்விரு ஏலங்களில் அதிகமான தொகையை தந்து பொருட்களை வாங்க பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கிடைக்கும் பணம் பிரதமரின் தூய்மை கங்கா திட்டத்துக்கான நிதி தொகுப்புக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GiftsreceivedbyModi #cleanGangaproject
Tags:    

Similar News