செய்திகள்

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு

Published On 2019-01-18 12:13 GMT   |   Update On 2019-01-18 12:13 GMT
காஷ்மீர் பனிச்சரிவிற்குள் சிக்கியவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #Kashmir #Avalanche
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்று காஷ்மீரின் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

காஷ்மீரில் உள்ள அனந்தநாக், பாட்கம், பாரமுல்லா, பந்தீப்போரா, கண்டர்பால், கார்கில், குல்கான், குப்வாரா மற்றும் லே ஆகிய 9 மாவட்டங்களிலும் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக வானிலை இலாகா கூறியிருந்தது. அதுபோல கடும் குளிரும் நிலவும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, இன்று காலை லே மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள லடாக் பகுதியில் கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்தன.



இந்த பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிய வந்தது.

பனிச்சரிவு ஏற்பட்டுள்ள கர்துங்லா பகுதி காஷ்மீர் மலைப்பகுதிகளில் இருக்கும் மிக உயரமான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலை சையோக்-நுப்ரா பள்ளத்தாக்குகளை இணைக்கும் பாதை ஆகும். அங்கு செல்ல கடும் சவால் நிலவுகிறது.

பனிச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ ராணுவத்தினரும் விரைந்து உள்ளனர். மீட்பு பணிகள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி புதைந்தவர்களில் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #Kashmir #Avalanche
Tags:    

Similar News