செய்திகள்
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது
பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #RajyaSabha #10pcquota #economicallybackward
புதுடெல்லி:
நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.
இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க., தி.மு.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த மசோதா மீதான விவாதம் சுமார் 10 மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்றது. இறுதியில், வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 165 வாக்குகள் பதிவாகின. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. #RajyaSabha #10pcquota #economicallybackward