செய்திகள்

பேரிடர் மீட்பு மேலாண்மையில் சிறப்பான சேவைக்கு விருது - ரூ.51 லட்சம் ரொக்கப்பரிசு

Published On 2018-12-26 13:52 GMT   |   Update On 2018-12-26 13:52 GMT
புயல்,வெள்ளம்,நிலநடுக்கம், தீவிபத்து போன்ற அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #disastermanagement #disastermanagementawards #disaster
புதுடெல்லி:

நிலநடுக்கம், தீவிபத்து, புயல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு குழுவினரின் பணிகள் இன்றியமையாததாக இருந்து வருகிறது. தேசிய மீட்பு படை மற்றும் மாநில அரசுகளின் மீட்பு படை வீரர்கள் தங்களது இன்னுயிரை துச்சமாக கருதி ஆபத்தில் சிக்கிய பல நூறு உயிர்களை பேரழிவு காலங்களில் காப்பாற்றுகின்றனர்.

சில சம்பவங்களில் இந்த வீரர்களுக்கு உறுதுணையாக உள்ளூர்வாசிகள் மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உதவி செய்கின்றனர்.

இந்நிலையில்,அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு விருது மற்றும்  ரொக்கப்பரிசு அளித்து ஊக்கப்படுத்த மத்திய அரசு தீர்மானித்தது.

இதன் அடிப்படையில் ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ என்னும் புதிய விருதை ஆண்டுதோறும் வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பேரிடர் காலங்களில் தங்களால் காப்பற்றப்பட்ட நபர்கள், கால்நடைகள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு தனிநபர் அல்லது எந்த தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உரிய ஆதாரங்களுடன் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என இதுதொடர்பாக மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர் தனிநபர்களாக இருந்தால் அவர்களின் சேவையை பாராட்டும் வகையில் நற்சான்றிதழுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசாக அளிக்கப்படும். தொண்டு அமைப்புகளாக இருந்தால் 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் நற்சான்றிதழும் அளிக்கப்படும். 

இப்படி விருது பெறும் நிறுவனங்கள் மேற்படி பரிசுத்தொகையை பேரிடர் மீட்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ விருதை பெறுவதற்கு தகுதியானவர்கள் 7-1-2019 தேதிக்குள் www.dmawards.ndma.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

இந்தியாவில் பிறந்தவர்கள், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தேர்வானவர்களின் பெயர்கள் 23-1-2019 அன்று அறிவிக்கப்படும் என  மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #disastermanagement #disastermanagementawards #disaster
Tags:    

Similar News