செய்திகள்

திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியை வெளியே கொண்டுவர திட்டம்

Published On 2018-12-22 06:28 GMT   |   Update On 2018-12-22 06:28 GMT
திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி முழுவதையும் கோவிலுக்கு வெளியில் அமைக்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. #Tirupati #Laddu
திருப்பதி:

திருப்பதியில் ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும் பிரசாதங்கள் அனைத்தும் கோவிலுக்குள் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும்.

ஆனால் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிப்பதன் காரணமாக கோவிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்படுவதால், பிரசாதம் தயாரிப்பதற்கு தேவையான இடத்தை ஒதுக்க தேவஸ்தானத்தால் இயலவில்லை.

அதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்டுக்கான பூந்தியை மட்டும் கோவிலுக்கு வெளியே தயாரிக்க முடிவு செய்து, அதற்கான பிரிவை வெளியில் அமைத்தது.

அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியில் தற்போது பூந்தி தயாரிக்கப்படுகிறது.

அதை எவர்சில்வர் பெட்டிகளில் அடைத்து கோவிலுக்குள் அனுப்பி மடப்பள்ளியில் வைத்து, சர்க்கரைப்பாகு கலந்து, உருண்டையாக லட்டு பிடித்து அதே பெட்டிகளில் வெளியில் அனுப்பி பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு லட்டு இருப்பதை தேவஸ்தானம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் லட்டு தயாரிப்பு தொடர்பாக புதிய நடைமுறையை உருவாக்குவது குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

அதாவது, கடந்த மாதம் நடைபெற்ற அறங்காவலர் குழுக்கூட்டத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மடப்பள்ளியை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி புதிய மடப்பள்ளியில் பூந்தி தயாரிப்பதற்கு கடலை மாவைக் கலப்பது, பூந்தி பொரிப்பது, சர்க்கரைப் பாகு செய்து, அதில் பூந்திகளைக் கலந்து தேய்ப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

லட்டுகளை உருண்டையாகப் பிடிப்பதற்கு மட்டும் கோவிலுக்குள் அனுப்புவது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

அவ்வாறு செய்வதால் கோவிலுக்குள் ஏற்பட்டிருக்கும் இடப்பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

இதுதொடர்பாக ஆகம பண்டிதர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாகத் தெரிகிறது.

எனினும், இடப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஏழுமலையான கோவிலுக்குள் இருக்கும் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களைத் தயாரிக்கும் மடப்பள்ளி முழுவதையும் கோவிலுக்கு வெளியில் கொண்டுவர தேவஸ்தானம் திட்டமிடுவதாக பக்தர்கள் குறை கூறியுள்ளனர். #Tirupati #Laddu


Tags:    

Similar News