செய்திகள்

ம.பி. முதல்வர் யார்? - முடிவெடுக்கும் அதிகாரத்தை ராகுலுக்கு அளித்து காங். எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம்

Published On 2018-12-12 14:06 GMT   |   Update On 2018-12-12 14:18 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம்? என தேர்வு செய்யும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு அளித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். #MadhyaPradeshMLAs #KamalNath #MPCongress #RahulGandhi
போபால்:

மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர். 
 
மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மெஜாரிட்டியை நெருங்கிய காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரசுக்கு சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்ததால், போதிய பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்தனர். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் கடிதம் அளித்தனர். இந்த சந்திப்பின்போது திக்விஜய் சிங், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர். 

போபால் நகரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. மாநில தலைவர் கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷோபா ஓஸா, ‘மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபையின் ஆளும்கட்சி தலைவராக (அடுத்த முதல்வர்) யாரை நியமிக்கலாம்? என முடிவெடுக்கும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு அளித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.

இந்த ஒருவரி தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்த முதல்வர் யார்? என்பதை ராகுல் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக, கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரில் ஒருவரை அவர் தேர்வு செய்யலாம் என தெரிகிறது.  #MadhyaPradeshMLAs #KamalNath #MPCongress #RahulGandhi 
Tags:    

Similar News