செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சியமைக்க பிடிபி, காங். வியூகம் - ஆளுநரை இன்று சந்திக்க முடிவு

Published On 2018-11-21 06:35 GMT   |   Update On 2018-11-21 06:35 GMT
ஜம்மு காஷ்மீரில் பிடிபி மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JKGovt #Mehbooba #GrandAllianceInJK
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர்.  முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி தொடர்ந்தது.

ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, கடந்த ஜூன் மாதம் கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகியது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இதற்காக மெகபூபா முப்தியின் பிடிபி, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆலோசனை நடத்தின.

இந்த ஆலோசனையின் முடிவில் பிடிபியும் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்திருப்பதாகவும், இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.



3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிடிபி கட்சியின் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வருவதால், எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையில் பிடிபி கட்சிக்கு 28 உறுப்பினர்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 உறுப்பினர்களும் இருப்பதால், இந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது. #JKGovt #Mehbooba #GrandAllianceInJK
Tags:    

Similar News