செய்திகள்

நீட் தேர்வு பயிற்சிக்கு புதிய ‘செல்போன் செயலி’ - டெல்லியில் படிக்கும் தமிழக மாணவி கண்டுபிடிப்பு

Published On 2018-11-03 23:35 GMT   |   Update On 2018-11-03 23:35 GMT
நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய ‘செல்போன் செயலி’ ஒன்றை டெல்லியில் பிளஸ்-2 படிக்கும் தமிழக மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
புதுடெல்லி:

‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக வடு, மாணவ-மாணவிகளின் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய ‘செல்போன் செயலி’ ஒன்றை டெல்லியில் பிளஸ்-2 படிக்கும் தமிழக மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

அந்த மாணவியின் பெயர் இனியாள். கணினி மீது கொண்ட ஆர்வம் காரணமாக கணினி அறிவியல் படித்து வருகிறார். விருதுநகரை சேர்ந்த இவர் டெல்லியில் போலீஸ் பயிற்சி கல்லூரியில் இணை கமிஷனராக பணியாற்றி வரும் ஜெகதீசன் கண்ணன் என்பவரது மகள்.

இதுபற்றி மாணவி இனியாள் கூறுகையில், அனிதா போன்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்தி ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. அப்படிப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இந்த செயலி பேருதவியாக இருக்கும். இதை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ ‘ aNEETa ’ என ‘டைப்’ செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் கேள்வி மற்றும் பதில்கள் உள்ளன என்றார்.

மாணவி இனியாள் மேற்கொண்ட இந்த முயற்சியை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 
Tags:    

Similar News