செய்திகள்

தி.மு.க.வின் மகத்தான வெற்றியை பார்க்க கருணாநிதி இல்லையே - மு.க.ஸ்டாலின் உருக்கம்

Published On 2019-05-24 01:35 GMT   |   Update On 2019-05-24 01:35 GMT
‘எடுத்த உறுதியை நிறைவேற்றி உள்ளோம்’ என்றும், ‘தி.மு.க.வின் மகத்தான வெற்றியை பார்க்க கருணாநிதி நம்முடன் இல்லையே...’ என்றும் தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெறும் வெற்றி பெற்றதை அடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு மாலையில் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களது வரவேற்பை மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.



பின்னர் அண்ணா அறிவாலய வளாகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாம் என்ன எதிர்பார்த்தோமோ அந்த வெற்றியை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய வாக்காளர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. அதேபோல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து பணியாற்றிய கூட்டணி கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நாம் களத்தில் இறங்குகின்ற நேரத்திலேயே ஒரு உறுதி எடுத்துக்கொண்டோம். கருணாநிதி இல்லாமல் நடைபெறுகின்ற தேர்தல் இந்த தேர்தல். எனவே, எப்படி இந்த தேர்தல் களத்தில் இறங்கப்போகின்றோம்?, எப்படி இந்த களத்தை சந்திக்கப்போகின்றோம்? என்ற தவிப்பு இருந்தது.

கருணாநிதி நம்முடன் இருந்திருந்தால் என்னென்ன பயிற்சியை, என்னென்ன தேர்தல் பணி முறைகளை, என்னென்ன பாடங்களை நமக்கு கற்றுத்தந்திருப்பாரோ, அவற்றையெல்லாம் நாம் ஏற்கனவே அவரிடத்தில் இருந்து கற்றுக்கொண்ட காரணத்தினால், அவர் வழியில் நாம் பாடுபட்டு பணியாற்றி வெற்றி பெற்று இருக்கிறோம். அது மட்டுமல்ல இந்த வெற்றியை அவருடைய நினைவிடத்துக்கு சென்று அவருக்கு நாம் வெற்றி மாலையை சமர்ப்பிப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தோம். அதை நிறைவேற்றி உள்ளோம்.

அந்த உறுதியை நிறைவேற்றக்கூடிய ஒரு நிலையை மக்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர். சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் இன்னும் சில தொகுதிகளில் வாக்கு வித்தியாசத்தை பொறுத்தவரையில் இழுபறி நிலை இருந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்து விடும் என்று கருதி, ஏதேனும் அதில் சூழ்ச்சி செய்யலாமா? சதி வலை பின்னலாமா? என்றெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

எனவே அதை அறிந்து, புரிந்து அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று தேர்தல் கமிஷனில் முறையிட்டு இருக்கிறோம். நிச்சயமாக அது நடக்காது என்று கருதுகிறோம்.

எனவே, ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோம். ஒரே ஒரு கவலை, கருணாநிதி இருந்து இதனை பார்க்கவில்லையே என்ற அந்த கவலை தான் என்னை ஆட்டி கொண்டிருக்கின்றது.

இருந்தாலும் கருணாநிதி சிலைக்கு முன்பும், அவரை உருவாக்கிய அறிஞர் அண்ணாவின் சிலைக்கு முன்பும் வெற்றி பெற்றிருக்கக்கூடிய நம்முடைய வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தி.மு.க. சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினருடன் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதி நினைவிடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தை சுற்றி வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றனர். இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று இரவு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 
Tags:    

Similar News